விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர திருவிழாவிற்கான கொடியேற்றம் இன்று காலை நடைபெற்றது.
தமிழகத்தில் கரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களும் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக பூட்டப்பட்டு பக்தர்கள் வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் பல்வேறு முக்கிய கோயில்களில் நடைபெறும் அனைத்து திருவிழாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூரத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி வெகுவிமர்சையாக 9 நாட்கள் திருவிழா கொண்டாடப்பட்டு தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.
தேரோட்டத்தன்று விருதுநகர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை விடப்பட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டும் முக்கிய பிரமுகர்கள் தேரை வடம் பிடித்து இழுப்பார்கள் .9 நாட்கள் நடக்கும் இந்தத் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்து வந்து ஆண்டாளை தரிசனம் செய்வார்கள்.
இந்த ஆண்டு கரோனா நோய்த் தொற்றின் காரணமாக இதுவரை எந்த ஆண்டும் இல்லாத வகையில் பக்தர்களின்றி நடைபெறக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. வரும் 24ஆம் தேதி கோயில் வளாகத்திற்குள் பக்தர்களின்றி தங்க தேர் இழுக்க இந்து சமய அறநிலையத் துறை அனுமதி வழங்கியுள்ளது.இந்த தேரோட்டத்தை முன்னிட்டு இன்று கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக ஆண்டாள் ரெங்கமன்னாருக்கு அதிகாலை சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் கொடிபட்டம் மாட வீதிகளில் மேல தாளம் முழங்க ஊர்வலமாக கொண்டு வரப்ப்பட்டது.
பின்னர் கொடி பட்டத்திற்கும் சிறப்பு பூஜைகள் தீப ஆராதனைகள் நடைபெற்றது.கொடியற்றத்தை முன்னிட்டு ஆண்டாள் ரெங்கமன்னார் சர்வ அலங்காரத்துடன் காட்சி அளித்தனர். பின்னர் கொடியை அர்ச்சகர் வாசுதேவன் ஏற்றினார்.
விழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லாத நிலையில் பக்தர்கள் கூட்டம் கூடியதை அடுத்து கோயிலுக்குள் பக்தர்களுக்கு அனுமதி வழங்கிய செயல் அலுவலர். பக்தர்கள் முன்டியடித்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனால் கோயில் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.