தமிழகம்

சென்னையில் கரோனா தொற்று குறைகிறது; பிற மாவட்டங்களிலும் தடுப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னையில் கரோனா தொற்று குறைந்து வருகிறது. அங்கு மேற்கொள்ளப்பட்ட தடுப்பு பணிகளை பிற மாவட்டங்களிலும் செயல்படுத்த வேண்டும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவுறுத்தியுள்ளார்.

தமிழக நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் நடைபெற்று வரும் கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் உள்ளனவா என வீடுதோறும் சென்று கணக்கெடுக்கும் பணியில் 12 ஆயிரம் பேர் ஈடுபட்டு வருகின்றனர். 500-க்கும் மேற்பட்ட காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

மேலும், மாநகராட்சி முழுவதும் 17 ஆயிரத்து 134 காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் மூலம் 10 லட்சத்து 65 ஆயிரத்து 981 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது.

அதில் 12 ஆயிரத்து 237 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் நாள்தோறும் சராசரியாக 10 ஆயிரம் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்படுகிறது.

இதனால் சென்னையில் தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது.

சென்னையைப் போன்று பிற பகுதிகளிலும் கரோனா தொற்று தடுப்பு பணி களை மேற்கொண்டு, கரோனாவை முற்றிலும் கட்டுப்படுத்த நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் பேசினார்.

இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை செயலர் ஹன்ஸ்ராஜ் வர்மா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் ஹர்மந்தர் சிங், சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ், நகராட்சி நிர்வாக ஆணையர் கா.பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

          
SCROLL FOR NEXT