தமிழகம்

கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு பரப்பியவர் கைது: மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை

செய்திப்பிரிவு

கந்த சஷ்டி கவசம் குறித்து யூ-டியூப்பில் அவதூறு வீடியோ வெளியிட்டதாக சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த ஒருவரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.

யூ-டியூப் சேனல் ஒன்றில் கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு வீடியோக்கள் வெளியிடப்பட்டிருந்தன. மேலும், இந்து கடவுள்கள் பற்றி மோசமாக விமர்சனங்களும் செய்யப்பட்டிருந்தன. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

சம்பந்தப்பட்ட யூ-டியூப் சேனல் மீதும், அதன் பேச்சாளர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், சேனலை தடை செய்ய வேண்டும் என பாஜக உள்ளிட்ட பல்வேறு தரப்பில் இருந்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்கள் அளிக்கப்பட்டன. இதையடுத்து 5 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிந்தனர்.

இந்நிலையில், யூ-டியூப் சேனலில் கந்த சஷ்டி கவசம் குறித்து விமர்சித்து அவதூறு வீடியோவெளியிட்டதாக வேளச்சேரியைச் சேர்ந்த செந்தில்வாசன் (49) என்பரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நேற்று இரவு கைது செய்தனர். இந்த வழக்கில் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT