ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2,000-ஐ தாண்டியது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று வரை 1,892 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் 785 பேர் குணமடைந்துள்ளனர். மீதி 1,069 பேர் மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என சுகாதாரத்துறை செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாவட்டத்தில் தொண்டி காவல்நிலைய பெண் ஆய்வாளர், பரமக்குடி நில எடுப்புப் பிரிவு வட்டாட்சியர், 24 வயதுடைய ராமநாதபுரம் ஆயுதப்படை காவலர் உள்ளிட்ட 132 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் மாவட்டத்தில் மொத்தம் 2,024 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழந்தனர்.
மேலும் இன்று ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த, கீழக்கரை தெற்குத் தெருவைச் சேர்ந்த 65 வயது முதியவர் உயிரிழந்தார். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43-ஆக உயர்ந்துள்ளது.