காவல் நிலையப் பணிகளை சட்டப்படி மட்டுமே செய்ய வேண்டும் என, காவல் ஆய்வாளர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் அறிவுரை வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் அனைத்து காவல்நிலைய காவல் ஆய்வாளர்களுக்கான அறிவுரைக் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகுத்து எஸ்.பி., ஜெயக்குமார் பேசியதாவது:
காவல் ஆய்வாளர்கள் பொதுமக்களிடம் கன்னியமாக நடந்து கொள்ள வேண்டும். புகார் மனுக்களை முறையாக விசாரிக்க வேண்டும். காவல் நிலைய ஆவணங்களை சரியாக பராமரிக்க வேண்டும்.
காவல் நிலையப் பணிகளை சட்டப்படி மட்டுமே மேற்கொள்ள வேண்டும். குற்றவாளிகளை கைது செய்யும்போது உச்ச நீதிமன்ற கட்டளைகளை கடைபிடிக்க வேண்டும்.
காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலர்கள் பொதுமக்களிடம் கனிவாகவும், சட்டப்படியாகவும் நடந்து கொள்கின்றனரா என்பதை கண்காணிக்க வேண்டும்.
காவல்துறை பொதுமக்களின் நண்பன் என்பதை நிரூபிக்கும் வகையில் நமது செயல்பாடு இருக்கவேண்டும். பொதுமக்களிடம் சட்டத்துக்கு புறம்பாக நடந்து கொள்ளும் காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
தொடர்ந்து ஆய்வாளர்களின் நிறை, குறைகளைக் கேட்டறிந்தார். கூட்டத்தில் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் செல்வன் மற்றும் 41 காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் 9 பேர் கரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்துள்ளனர். அவர்களுக்கு எஸ்.பி ஜெயக்குமார் பழக்கூடைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பாராட்டி மீண்டும் பணிக்கு அனுப்பி வைத்தார்.