தமிழகம்

கன்னியாகுமரியில் கடல் சீற்றம்: மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை- வருவாய் இழப்பால் தவிப்பு

எல்.மோகன்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக கடும் சூறைகாற்று வீசி வருகிறது. இதனால் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே குமரி மேற்கு கடல் பகுதியில் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருப்பதால் விசைப்படகுகள் கடலுக்குச் செல்லவில்லை. ஊரடங்கும் அமலில் இருப்பதால் கடற்கரையில் மீன்பிடி துறைமுகங்கள் அனைத்தும் செயல்படவில்லை.

அதே நேரம் கரையோரப் பகுதிகளில் நாட்டுப்படகு, மற்றும் பைபர் படகுகளில் மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர்.

இதற்கிடையே கடந்த இரு தினங்களாக கன்னியாகுமரி ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான குமரி கடல் பகுதியில் சூறைகாற்றால் கடும் கடல் சீற்றம் நிலவி வருகிறது.

வேகமாக எழும் அலைகள் தடுப்புப் பகுதிகளைத் தாண்டி கடற்கரை கிராமங்களுக்குள் புகுந்து வருகின்றன. இதனால் மெரைன் போலீஸார் கடற்கரை பகுதிகளில் மக்கள் நடமாட வேண்டாம் என எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

கடல் சீற்றத்தால் குமரி கடற்கரை கிராமங்களில் கடந்த இரு நாட்களாக நாட்டுப்படகு, மற்றும் பைபர் படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால் மீனவர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT