தமிழகம்

நியாயவிலைக் கடை ஊழியர்களுக்கு கரோனா பரிசோதனை நடத்த வேண்டும்: தொழிற்சங்கத்தினர் கோரிக்கை

செய்திப்பிரிவு

தமிழகம் முழுவதும் நியாயவிலைக் கடை ஊழியர்களுக்கு கரோனா பரிசோதனை நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தொழிற்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது:

கரோனா ஊரடங்கில் அரசு வழங்கிய தளர்வால் கடந்த மே 18-ம் தேதி சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தலைமை அலுவலகம் மீண்டும் செயல்படத் தொடங்கியது. நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்பேரில் பெரும் பாலான ஊழியர்கள் பணிக்கு வந்தனர். இதில் 12 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால், அலுவலகத்தின் பல பிரிவுகளில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நியாயவிலைக் கடைகள் உள்ளன. சென்னையில் மட்டும் 4 ஆயிரத்து 500 நியாயவிலைக் கடைகள் உள்ளன. இக்கடை பணியாளர்கள் பொதுமக்களுடன் நெருக்கமாக பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதில்லை. பொதுமக்களும் சமூக இடைவெளியை கடைபிடிப்பதில்லை. இதனால் பலருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக நூற்றுக்கணக்கான கடைகள் மூடப்பட்டன.

கரோனா அறிகுறி இல்லாத பொதுமக்கள் மூலம் ஊழியர்களுக்கு கரோனா பரவ வாய்ப்பு உள்ளது. எனவே தமிழகம் முழுவதும் நியாயவிலைக் கடை பணியாளர்கள் அனைவருக்கும் கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட வேண்டும். அவர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT