மதுரையில் வரும் 14-ம் தேதி வரை முழு ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (ஜூலை 12) வெளியிட்ட அறிவிப்பு:
"கரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுக்க தமிழக அரசு, தொடர்ந்து தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வரும் நிலையில், மதுரை மாவட்டத்தில் நகர்ப்புறப் பகுதிகளில் கரோனா நோய்த் தொற்றுப் பரவல் அதிகரித்து வந்த காரணத்தால், மதுரை மாவட்டத்தில் மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகள், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் வட்டாரங்களுக்கு உட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும், கடந்த ஜூன் 24 அதிகாலை முதல் ஜூன் 30 இரவு 12 மணிவரை 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இந்த முழு ஊரடங்கு உத்தரவானது முதலில் ஜூலை 5 வரையும், அதன் பின்னர் ஜூலை 12 நள்ளிரவு வரையும் நீட்டித்து ஆணையிடப்பட்டது.
இந்த முழு ஊரடங்கின் காரணமாக மதுரை மாவட்டத்தில் நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த காய்ச்சல் முகாம்கள் மற்றும் வீடுதோறும் நடைபெற்று வரும் ஆய்வு ஆகியவை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மதுரை மாவட்டத்தில் மேற்கண்ட பகுதிகளில், முழு ஊரடங்கினை மேலும் 2 நாட்கள் நீட்டித்தால், தற்போது நடைபெற்று வரும் தீவிரப் பணிகள் மூலமும், காய்ச்சல் முகாம்களின் எண்ணிக்கையை அதிகரித்து நோய்த் தொற்று உள்ளவர்கள் அனைவரையும் கண்டறிந்து, நோய்தொற்றினைக் கட்டுப்படுத்த ஏதுவாக அமையும் என்பதால், மதுரை மாவட்டத்தில் மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்டபகுதிகள், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் வட்டாரங்களுக்கு உட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும், ஜூலை 14 நள்ளிரவு 12 மணி முடிய முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது.
முழு ஊரடங்கு உத்தரவு காலத்தில், ஏற்கெனவே அமலில் உள்ள கட்டுப்பாடுகளும், தளர்வுகளும் ஜூலை 14 நள்ளிரவு 12 மணி முடிய தொடரும் என்றும் அறிவிக்கப்படுகிறது.
முழு ஊரடங்கு ஜூலை 14 வரை அமலில் உள்ள மதுரை மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில், ஜூலை 15 அதிகாலை முதல் ஜூலை 31 நள்ளிரவு 12 மணிவரை, இப்பகுதிகளில் ஜூன் 24-க்கு முன்னர் இருந்த ஊரடங்கின் நிலை மீண்டும் அமலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்படுகிறது.
மேற்சொன்ன நடவடிக்கையின் காரணமாக மதுரை மாவட்டத்தில், கரோனா வைரஸ் நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த வாய்ப்புகள் ஏற்படும் என்பதால், பொதுமக்கள் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க கேட்டுக் கொள்ளப்படுகிறது".
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.