திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள உள்ளிக்கோட்டை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நேற்று ஆய்வு செய்து, விவசாயிகளுடன் கலந்துரையாடிய தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் 521 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றின் மூலம் நிகழாண்டில் இதுவரை வரலாற்றில் இல்லாத அளவில் 26.24 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இன்னும் இந்தப் பருவம் முடிவடையாத நிலையில், இந்த அளவு நெல் கொள்முதலே வரலாற்று சாதனைதான். இதற்கு தமிழக அரசு பின்பற்றி வரும் நீர் மேலாண்மை திட்டமே காரணம். விவசாயிகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடே இல்லை என்ற நிலையை தமிழக முதல்வர் உருவாக்கியுள்ளார்.
மேலும், மன்னார்குடி வட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம் மூலமாக ரூ.10 கோடி மதிப்பீட்டில் 120 வீடுகள் அடங்கிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு தமிழக அரசு உத்தரவு வெளியிட்டுள்ளது என்றார்.