தமிழகம்

முதியோர் உதவித்தொகை நிறுத்தம்: முதல்வரை பார்க்க அனுமதிக்க கோரி கதறி அழுத மூதாட்டி - தலைமைச் செயலகத்தில் பரபரப்பு

செய்திப்பிரிவு

முதியோர் உதவித்தொகை பல ஆண்டுகளாக வரவில்லை என்று தலைமைச் செயலக போலீஸாரிடம் விருதுநகர் மூதாட்டி கதறி அழுதது பரபரப்பை ஏற்படுத்தியது.

விருதுநகரை சேர்ந்த மூதாட்டி கோதையம்மாள். 85 வயதாகும் இவர் தனியாக வாழ்ந்து வருகிறார். இவர் விருதுநகரில் இருந்து புறப்பட்டு தனியாக நேற்று தலைமைச் செயலகம் வந்திருந்தார்.

‘‘வயசு 85-க்கு மேல ஆகுதுய்யா. வேலைக்குப் போக முடியல. தமிழக அரசாங்கம் கொடுக்குற முதியோர் உதவித் தொகைதான் எனக்கு ரொம்ப உதவியா இருந்துச்சு. சில வருசம் முன்னாடி திடீர்னு உதவித்தொகைய நிறுத்திட்டாங்க. இது சம்பந்தமா விருதுநகர் கலெக் டர் அலுவலகத்துல பலமுறை புகார் கொடுத்தேன். நடவடிக்கை எடுக்கிறேன்.. எடுக்கிறேன்னு சொன்னாங்களே தவிர, எதுவும் செய்யல. ரொம்ப வருசமா முதியோர் உதவித்தொகை எனக்கு வரலய்யா. முதல்வர் அம்மாவ நேர்ல பாத்து என் பிரச்சினைய சொல்லிட்டுப் போக லாம்னுதாய்யா மெட்ராசுக்கு வந்தேன்..’’ என்று பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டிருந்த போலீஸாரிடம் கோதையம்மாள் கதறி அழுதார்.

ரேஷன் கார்டு, அடையாள அட்டை போன்றவற்றை கொண்டுவந்திருந்தார். ஆனால், அவருக்கு மனு எழுதத் தெரியவில்லை. ஆறுதல் கூறிய போலீஸார், அவரை முதல்வர் தனிப்பிரிவுக்கு அழைத்துச் சென்று, முறைப்படி புகார் அளிக்க உதவினர்.

SCROLL FOR NEXT