கோவில்பட்டி பகுதியில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் ஜூலை 11-ம் தேதி முதல், 5 நாட்களுக்குக் கடைகள் முழு நேரம் அடைக்கப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கோவில்பட்டி பகுதியில் கரோனா வைரஸ் தொற்றால் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், தினமும் நோய்த்தொற்று அதிகரிப்பதால் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் நலன் கருதியும், கோவில்பட்டி நகராட்சி மேற்கொண்டு வரும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தருவதற்காகவும் அத்தியாவசியக் கடைகள் என காய்கறி, மருந்து மற்றும் பால் கடைகள் தவிர மற்ற அனைத்துக் கடைகளும் 11-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு முழு நேரக் கடை அடைப்பு செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கு வணிகர்களும் பொதுமக்களும் ஆதரவளிக்க வேண்டும்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.