காரைக்குடி வட்டத்தில் கிராம கணக்குகளைத் தாக்கல் செய்யாத 3 கிராம நிர்வாக அலுவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
காரைக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜூன் 29 முதல் ஜூலை 6-ம் தேதி வரை தேவக்கோட்டை கோட்டாட்சியர் சுரேந்திரன் தலைமையில் ஜமாபந்தி நடந்தது. இதில் ஜெயம்கொண்டான் மற்றும் புக்குடி குரூப் விஏஓ கிருஷ்ணகுமார், களத்தூர் விஏஓ அருள்ராஜ், நாட்டுச்சேரி விஏஓ இளங்கோவன் ஆகியோர் கிராம கணக்குகளைத் தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து மூன்று விஏஓக்களையும் சஸ்பெண்ட் செய்து கோட்டாட்சியர் சுரேந்திரன் உத்தரவிட்டார்.
அவர் கூறுகையில், ‘காரைக்குடி வட்டத்தில் 64 வருவாய் கிராமங்கள் உள்ளன. ஜமாபந்தி அலுவலரிடம் 60 வருவாய் கிராமங்களுக்கு அந்தந்த விஏஓக்கள் கணக்கை தாக்கல் செய்தனர். ஆனால் 4 வருவாய் கிராமங்களை கவனிக்கும் 3 விஏஓக்கள் கணக்கை தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்றார்.