தமிழகம்

ராமநாதபுரம் கடற்கரை தாது மணல் கொள்ளையை தடுக்கக்கோரி வழக்கு; ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

கி.மகாராஜன்

ராமநாதபுரம் புதுமடம் கடற்கரையில் நடைபெற்று வரும் சட்டவிரோத தாது மணல் கொள்ளையை தடுக்கக்கோரிய வழக்கில் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் புதுமடத்தைச் சேர்ந்த அஜ்மல்ஷரிபு, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

புதுமடம் ஊராட்சிக்கு உட்பட்ட கடற்கரை பகுதியில் அணு உலைக்கு தேவையான மோனோசைட் தாது மணல் அதிகளவில் உள்ளது. இந்த மணலை கணிமவளத்துறை அனுமதியில்லாமல் பலர் சட்டவிரோதமாக அள்ளி வருகின்றனர்.

இதனால், இயற்கை வளம் பாதிப்பு, அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே, சட்டவிரோதமாக தாதுமணல் அள்ளுவதைத் தடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், பி.ராஜமாணிக்கம் விசாரித்து, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர், கணிமவளத்துறை இயக்குநர், கடலோர மேலாண்மை ஆணையக்குழு தலைவர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஆக. 5-க்கு ஒத்திவைத்தனர்.

SCROLL FOR NEXT