தமிழகம்

நெல்லை ராமையன்பட்டி குப்பைக் கிடங்கில் பயங்கர தீ: மூச்சுத் திணறலால் பொதுமக்கள் அவதி 

அ.அருள்தாசன்

நெல்லை ராமையன்பட்டி குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக கடும் புகை சூழ்ந்தது. அருகில் வசிக்கும் மக்கள் மூச்சுத் திணறலுக்கு உள்ளாகினர்.

நெல்லை மாநகராட்சிக்கு சொந்தமான இராமையன்பட்டி குப்பை கிடங்கில் இன்று மாலை 5 மணியளவில் பயங்கர தீ பரவியது.

காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென குப்பைக்கிடங்கு முழுவதும் பரவி வருகிறது இதனால் குப்பை கிடங்கை சுற்றியுள்ள சுமார் 5 கிராம மக்கள் புகை மூட்டினால் மூச்சுவிட அவதிப்படுகின்றனர் .

வருடா வருடம் ஜூன், ஜூலை மாதங்களில் இது போல் மாநகராட்சி நிர்வாகம் குப்பை கிடங்கில் தீ வைப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பாளையங்கோட்டை, பேட்டை தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைத்து வருகின்றனர்.

நெல்லை மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு மற்றும் கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலை ராமையன்பட்டி யில் சுமார் 150 ஏக்கரில் அமைந்துள்ளது. இதில் 32.5 ஏக்கரில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு அமைந்துள்ளது .

இங்கு மாநகராட்சியில் இருந்து தினசரி 110 டன் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதுபோல மாநகராட்சியின் பல்வேறு இடங்களில் சுமார் 44 நுண் குப்பை கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இன்று மாலை சுமார் நாலு முப்பது மணி அளவில் குப்பை கிடங்கில் தீ பற்றி எரிந்தது .காற்றின் வேகம் அதிகமாக இருப்பதினால் மளமளவென தீ பரவியது .இதனால் சுற்றுவட்டாரம் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.

SCROLL FOR NEXT