தமிழகத்தில் கரோனா வைரஸ்பரவல் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கையாக பேருந்து, ரயில் உள்ளிட்ட போக்குவரத்துகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், மருத்துவம் உட்படஅத்தியாவசியப் பணிகளுக்கு செல்வோருக்காக அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில்சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதுதொடர்பாக அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘கரோனா வைரஸ்பரவலை தடுக்க ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அத்தியாவசியப் பணிகளான மருத்துவம், பொது சுகாதாரம், குடிநீர், மின்சாரம் மற்றும் அரசின் முக்கிய துறைகளில் பணிகள் தொடர்கின்றன.
அந்தவகையில், அரசின் பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் பணிக்கு வரும் வகையில், தமிழக முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி, அரசு பேருந்துகளை இயக்கி வருகிறோம்.
தமிழகம் முழுவதும் தினமும் 800-க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன’’ என்றனர்.