கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்த மதுராந்தகம் அரசு மருத்துவமனை மருத்துவர் சுகுமாரன் குடும்பத்துக்கு அரசு அறிவிப்பின்படி நிவாரணமும் குடும்பத்தில் ஒருவருக்குஅரசுப் பணியும் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட இரங்கல் செய்தி:
மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவர் எஸ்.சுகுமாரன், கரோனா தொற்றுக்குள்ளாகி தனியார் மருத்துவமனையில் ஜூன் 20 முதல் 30-ம் தேதி வரை சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவருக்கு ஏற்கெனவே நீரிழிவு மற்றும் ரத்த அழுத்த பாதிப்பு இருந்ததாகவும், நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டதால் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஜூன் 30-ம் தேதி சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர், சிகிச்சை பலனின்றி ஜூலை 3-ம் தேதி காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
அரசு வேலை
சுகுமாரனை இழந்துவாடும் அவரது குடும்பத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தர சுகாதாரத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பேரிடர் தொற்று காலத்தில் கடமை தவறாமல் கண்ணியத்துடன் பணியாற்றிய சுகுமாரன் குடும்பத்துக்கு அரசு அறிவித்தபடி நிவாரணம் வழங்கவும், குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.