தமிழகம்

ஊரடங்கு தளர்வு:  காவல் ஆணையர் அலுவலகத்தில் போலீஸார்- வணிகர்கள் ஆலோசனைக்கூட்டம்

செய்திப்பிரிவு


ஊரடங்கு தளர்வு ஜூலை 6 முதல் அமலுக்கு வருவதால் வணிகர்கள், சிறு வியாபாரிகள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் காவல் ஆணையர் அலுவலகத்தில் நடந்தது.

இதுகுறித்து காவல் ஆணையர் அலுவலக செய்திக்குறிப்பு:

“நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று நோய் பரவுதலை தடுக்கும் பொருட்டு, சிஆர்பிசி பிரிவு 144 கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில், பொதுமக்கள், தங்களை வீட்டில் தனிமைப்படுத்துவும், அத்தியாவசிய தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்கவும், முக்கிய தேவையாக வெளியே செல்லும்போது, முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழக அரசு 06.7.2020 முதல் சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு செயல்பட உள்ளதால், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால், உத்தரவின்பேரில், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள் அறிவுறுத்தலின் பேரில், அனைத்து காவல் ஆய்வாளர்கள் தலைமையில், தங்களது காவல் நிலைய எல்லையில் உள்ள வணிகர்கள், வியாபாரிகள், சிறிய கடை உரிமையாளர்களிடம் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த கலந்தாய்வு மேற்கொண்டு அறிவுரைகள் வழங்கப்பட்டது. இக்கலந்தாய்வில்,

* கடைக்கு வரும் நபர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

* கடைக்குள் நுழையும் முன்பு வெப்பமாணி கொண்டு உடல் வெப்ப நிலையை பரிசோதித்து சராசரி வெப்பநிலை உள்ள நபர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும்.

* அனைவரும் கடையில் திரவ சுத்திகரிப்பான் வைத்துக கொண்டு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களிடம் கைகளை கழுவி சுத்தம் செய்யச் சொல்லி அதன் பின்னரே கடைக்குள் அனுமதிக்க வேண்டும்,

* மேலும் வாசிக்க கடையில் சமூக இடைவெளியை பின்பற்றி பொருட்களை வாங்க அறிவுறுத்த வேண்டும் .

* ஒவ்வொரு கடையின் நுழைவாயிலிலும் ஒருவருக்கொருவர் குறைந்தபட்சம் 3 அடி தூரத்தைக் கொண்ட வட்டங்களை வரையவும். வாடிக்கையாளரை வட்டத்தில் நிற்கும்படி வற்புறுத்தவும்.

* கடையின் தரைவிரிப்பு பகுதியைப் பொறுத்து குறைந்தபட்ச வாடிக்கையாளர்களை மட்டும் கடைக்குள் அனுமதிக்க வேண்டும், மீதமுள்ள நபர் வெளியே செல்லும் வரை வெளியே காத்திருக்க வேண்டும்.

* ஒவ்வொரு கடையும் போதுமான அளவு முகக்கவசங்களை வைத்திருக்க வேண்டும்.

பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ஊரடங்கு தளர்வு காலங்களில் மேற்படி அறிவுரைகளை கடைபிடிக்க சென்னை பெருநகர காவல்துறை சார்பாக அறிவுறுத்தப்படுகிறது”.
இவ்வாறு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT