விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உயிரிழந்த பெண்ணுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் இறுதிச்சடங்கில் பங்கேற்றோர் அச்சம் அடைந்துள்ளனர்.
ராஜபாளையம் தெற்கு வைத்தியநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பார்வதி (45). உடல் நிலை சரியில்லாத நிலையில் கடந்த 26-ம் தேதி ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.
அங்கு மருத்துவர்கள் சாதாரண காய்ச்சல் எனக் கூறி பார்வதியை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் வீட்டுக்குச் சென்ற பார்வதிக்கு மூச்சு திணறல் அதிகமாக ஏற்பட்டுள்ளது. அதையடுத்து பார்வதி மீண்டும் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.
அப்போது அவருக்கு கரோனா பரிசோதனை மாதிரிகள் எடுக்கப்பட்டது. பின் கிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பார்வதி அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 30-ம் தேதி பார்வதி உயிரிழந்தார்.
மேலும், கரோனா பரிசோதனை முடிவு வருவதற்கு முன் கடந்த 30-ம் தேதி அன்றே உறவினர்கள் இறுதிச்சடங்கு செய்து பார்வதியின் உடலை அடக்கம் செய்துள்ளனர்.
இந்நிலையில், உயிரிழந்த பார்வதிக்கு கரோனா தொற்று இருப்பதாக கடந்த 3-ம் தேதி தெரியவந்தது. இதனால் பார்வதியின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற அவரது உறவினர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.