தமிழகம்

மருத்துவ முழுக் கவச உடை ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி திருப்பூர் தொழில்துறையினர் வரவேற்பு

செய்திப்பிரிவு

மருத்துவ முழுக் கவச உடை ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதற்கு, தொழில்துறையினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்தின் (Apparel Export Promotion Council -AEPC) அகில இந்தியத் தலைவர் ஏ. சக்திவேல் கூறியிருப்பதாவது:

மருத்துவ என்.95 முகக் கவசம் மற்றும் முழுக் கவச உடை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்திருந்தது. மருத்துவ முகக் கவசம் மற்றும் முழுக் கவச உடை தயாரிப்பில் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இவைகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என ஏ.இ.பி.சி. தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இதை ஏற்று மாதம் 50 லட்சம் மருத்துவ முழுக் கவச உடைகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் மருத்துவ என். 95 முகக் கவசங்களுக்கும் ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மருத்துவ முழுக் கவச உடை ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கிய பிரதமர், நிதி மற்றும் வர்த்தக அமைச்சர் ஆகியோருக்கு ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகத்தின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT