திருச்சி அரசு மருத்துவமனை கரோனா வார்டில் சிகிச்சையில் இருந்த விவசாய சங்க நிர்வாகி உயிரிழந்தார். திருச்சியில் ஜூன் 26-ம் தேதி முதல்வருடனான விவசாய பிரதிநிதிகள் சந்திப்பில் அவரும் இடம் பெற்றிருந்ததால், அரசு அலுவலர்கள் அச்சமடைந்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் புலியூரைச் சேர்ந்தவர் ஏ.நாகராஜன். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் விவசாய அணி மாநிலத் தலைவராக இருந்தார். இவர், புலியூர் ஊராட்சி மன்றத் தலைவராகவும், வயலூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலர் குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார். விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்களை நடத்தியுள்ளார்.
இந்தநிலையில், உடல் நலக் கோளாறு காரணமாக திருச்சி தனியார் மருத்துவமனையிலும், பின்னர் நேற்று (ஜூலை 1) திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். அங்கு இன்று (ஜூலை 2) பிற்பகல் உயிரிழந்தார். அங்கு நாகராஜனுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
திருச்சியில் ஜூன் 26-ம் தேதி நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற முதல்வர் கே.பழனிசாமி, விவசாய பிரதிநிதிகளை தனியாக சந்தித்தார். 12 பேர் அடங்கிய விவசாய பிரதிநிதிகள் பட்டியலில் புலியூர் நாகராஜனும் இடம் பெற்றிருந்தார். இந்த நிலையில், கரோனாவால் அவர் உயிரிழந்ததால் மாவட்ட ஆட்சியர் அலுவலக அலுவலர்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதனிடையே திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை கரோனா வார்டில் சிகிச்சையில் இருந்த சென்னையைச் சேர்ந்த 48 வயதான பெண்ணும் சிகிச்சை பலனின்றி நேற்று (ஜூலை 1) நள்ளிரவு உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படாமல் அரசு வழிகாட்டுதலின்படி இன்று (ஜூலை 2) காலை ஓயாமரி இடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.