சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக தமிழக டிஜிபி, சிறைத்துறை ஐஜி, தூத்துக்குடி எஸ்.பி.,க்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் கோவில்பட்டி கிளை சிறையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்மமான முறையில் இறந்தனர். இவர்கள் இருவரையும் கடந்த 19-ம் தேதி இரவு கைது செய்த போது, சாத்தான்குளம் போலீஸார் கொடூரமான முறையில் தாக்கியதால் தான் இருவரும் சிறையில் உயிரிழந்துள்ளனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சாத்தான்குளம் வியாபாரிகள் மரணம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு தூத்துக்குடி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில் , சாத்தான்குளத்தில் போலீஸ் காவலில் தந்தை , மகன் உயிரிழந்தது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் மரணத்தில் அப்பட்டமான மனித உரிமை மீறல் நடைபெற்றுள்ளது என்று எம்.பி.கனிமொழி கடிதத்தில் குற்றம் சாட்டியிருந்தார்.
இதேபோல் பல்வேறு தரப்பிலிருந்தும் தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு கடிதங்கள், கோரிக்கைகள் சென்றன.
இந்நிலையில், தேசிய மனித உரிமைகள் ஆணையம் தமிழக டிஜிபி, சிறைத்துறை ஐஜி, தூத்துக்குடி எஸ்.பி., கோவில்பட்டி கிளைச் சிறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்ட பல தரப்பிலிருந்தும் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்தின் பின்னணியை விசாரிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. காவல்துறையினரின் அத்துமீறலாலேயே அவர்கள் உயிரிழந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பிரேதப் பரிசோதனை அறிக்கை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் உள்ளடக்கிய விளக்கத்தை நோட்டீஸ் பெறப்பட்ட நாளில் இருந்து 6 வாரங்களுக்குள் அனுப்புமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.