தமிழகத்தில் 6-ம் கட்ட ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வருகிறது. அதேநேரத் தில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகள் நீடிக் கும். மற்ற பகுதிகளில் ஏற்கெனவே உள்ள தளர்வுகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24-ம் தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இடைவெளியில் இந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் நோய்ப் பரவல் தாக்கத்தைப் பொறுத்து தளர்வுகளும் அளிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மே மாத இறுதியில் அறிவிக்கப்பட்ட 5-ம் கட்ட ஊரடங்கு நேற்று இரவுடன் முடிவுக்கு வந்தது. இது தொடர்பாக நேற்று முன்தினம் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அப்போது ஊரடங்கை நீட்டிப்பது, நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் விதிமுறைகளை கடுமையாக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் 6-ம் கட்டமாக ஜூலை 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. ஆனால் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், செங்கல்பட்டு, திருவள் ளூர், காஞ்சிபுரம், மதுரை மாவட்டங் களின் சில பகுதிகளில் ஜூலை 5-ம் தேதி வரை முழு ஊரடங்கு தொடரும் என்றும், இந்தப் பகுதிகளில் ஜூன் 6-ம் தேதி முதல் ஏற்கெனவே செயல்படுத் தப்பட்டு வந்த தளர்வுகள் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் தளர்வுகள் அனுமதிக்கப்பட்ட நிலையில், நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள விதிமுறைகள் தொடரும். நோய்ப் பரவல் குறைவு அடிப்படையில் தளர்வு கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
மேலும், மாவட்டங்களுக்குள் தற் போது அனுமதிக்கப்பட்டுள்ள அரசு மற்றும் தனியார் பொது பேருந்து போக்குவரத்து இன்று முதல் வரும் 15-ம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட் டுள்ளது. தமிழகத்தின் இதர பகுதி களில் இன்று முதலும், முழு ஊரடங்கு அமலில் உள்ள சென்னை உள்ளிட்ட பகுதிகளில் ஜூன் 6 ம் தேதி முதலும் தேநீர் கடைகள், உணவகங்கள், மளிகை மற்றும் காய்கறி கடைகள் காலை 6 முதல் இரவு 8 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முடிதிருத்தகங்கள், அழகு நிலையங் களும் கட்டுப்பாடுகளுடன் இயங்க லாம். மால்கள் தவிர இதர வணிக நிறு வனங்கள், ஷோரூம்கள், ஜவுளி, நகைக்கடைகள், தனியார் நிறுவனங்களும் கட்டுப்பாடுகளுடன் செயல்படலாம்.
அரசாணை வெளியீடு
இந்நிலையில், 6-ம் கட்ட ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வுகள் தொடர்பாக நேற்று முன்தினம் வெளியிட்ட அறிவிப்புகளுக்கான அரசாணையை தமிழக அரசு நேற்று பிறப்பித்துள்ளது. அதில், கூறப்பட்டிருப்பதாவது:
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் 100 சதவீத ஊழியர்களுடன் செயல் படலாம் என்றாலும், 20 சதவீதம் பேர் வீட்டிலிருந்தே பணியாற்றும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும்.
65 வயதுக்கு மேற்பட்டவர்கள், இதர நோய்களுடன் இருப்பவர்கள், கர்ப்பிணிகள், 10 வயதுக்கு குறைந்த சிறுவர், சிறுமிகள் வீட்டைவிட்டு வெளியில் வரக்கூடாது.
ஆரோக்கிய சேது செயலி மூலம் தொற்று அறிகுறி உள்ளவர்களை எளிதில் கண்டறிய முடியும் நிலை உள்ளதால் மற்றவர்களுக்கு பரவுவது தடுக்க முடிகிறது. எனவே, தனியார் ஒவ்வொருவரும் இந்த செயலியை கைபேசியில் பதிவிறக்கம் செய்வதை மாவட்ட நிர்வாகங்கள் அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கரோனா மேலாண்மை
தேசிய அளவில் கரோனா மேலாண்மை குறித்த தகவல்களும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 6 அடி தூரம் என்ற வகையில் சமூக இடைவெளி பின்பற்றப்பட வேண்டும். பொது இடங்களில் எச்சில் துப்புபவர்களுக்கு தண்டனை மற்றும் அபராதம் விதிக்க வேண்டும். பொது இடங்களில் மது, பான், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பயன்படுத்துவது தடை செய்யப்படுகிறது. மேலும், பொது இடங்களில் 5 பேருக்குமேல் கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது என்றும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
அறிவிப்பில் முரண்பாடு
ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக தமிழக அரசு நேற்று முன்தினம் வெளியிட்ட அறிவிப்பில், திருமண நிகழ்ச்சிகளில் 50 பேருக்குமேல் பங்கேற்கக் கூடாது. இறுதிச்சடங்கு மற்றும் இறுதி ஊர்வலங்களில் 50 பேருக்குமேல் பங்கேற்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுதொடர்பாக நேற்று வெளியிடப்பட்ட அரசாணையில், திருமண நிகழ்ச்சிகளில் 50 பேருக்குமேல் பங்கேற்க கூடாது என்றும், இறுதிச்சடங்கு, ஊர்வலங்களில் 20 பேருக்குமேல் பங்கேற்க கூடாது என்றும் முரண்பாடாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, இரண்டு நிகழ்வுகளுக்கும் 50 பேர் வரை அனுமதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.