தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்புப் பணிகளை சிறப்பு அதிகாரி குமார் ஜெயந்த் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கரோனா வைரஸ் பரவல் தடுப்பு பணிகளை கண்காணிக்க ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டனர்.
அதன்படி தூத்துக்குடி மாவட்ட சிறப்பு அதிகாரியாக மூத்த ஐஏஎஸ் அதிகாரி குமார் ஜெயந்த் நியமிக்கப்பட்டார். அவர் இன்று தூத்துக்குடி வந்து, மாவட்டத்தில் நடைபெற்று வரும் கரோனா பரவல் தடுப்பு பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி சுனாமி காலனி, டூவிபுரம் உள்ளிட்ட நோய் கட்டுப்பாட்டு பகுதிகள், மில்லர்புரம் தற்காலிக காய்கறி சந்தை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் அவர் நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து கரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
தொடர்ந்து சிறப்பு அலுவலர் குமார் ஜெயந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 24,584 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இதில் நேற்று வரை 789 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 590 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் 155 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்பு பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் கரோனா சமூகப்பரவல் என்பது இல்லை என்றார் அவர்.