ஒரத்தூர் கிளையாற்றின் குறுக்கே ரூ.60 கோடி செலவில் ரூ.1.35 டிஎம்சி கொள்ளளவு கொண்ட நீர்தேக்கம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு நீர்வள மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குநர் கே.சத்யகோபால் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் வடமங்கலம் ஏரியில் ரூ.52.59 லட்சம் மதிப்பீட்டிலும், கொளத்தூர் ஏரியில் ரூ.47.64 லட்சம் மதிப்பீட்டிலும் ஏரிகள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை நீர்வள மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குநர் சத்யகோபால் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியது:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின்கீழ் ரூ.17.31 கோடி நிதி ஒதுக்கப்பட்டு 32 ஏரிகள் தூர்வாரப்பட்டு வருகின்றன.
மத்திய அரசு மூலம் ரூ.244கோடி நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டு, அதில் ஒரத்தூர் கிளையாற்றில் ரூ.60 கோடி செலவில் வெள்ள நீரை சேமிக்கவும், அடையாற்றின் வடிநிலப் பகுதியில் உள்ள வெள்ளச் சூழல் அபாயத்தை குறைக்கவும் ஒரத்தூர் ஆற்றின் குறுக்கே நீர்தேக்கம் அமைக்கப்பட உள்ளது என்றார்.
ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் பொன்னையா, கண்காணிப்புபொறியாளர் முத்தையா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.