தமிழகத்தில் கரோனா பரவல் தடுப்பு பணியில் தீவிரமாக பணியாற்றும் அனைத்து போலீஸாருக்கும் முகத்தை மறைக்கும் கவசம் (ஷீல்டு) வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா பரவல் தடுப்ப பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், போலீஸார், சுகாதாரப் பணியாளர்கள், வருவாய்த்துறையினர், தூய்மை பணியாளர்கள், ஊடகத்தினர் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களை பாதுகாக்க கவச உடை, முக கவசம், கையுறை போன்றவை வழங்கக்கோரி மதுரைச் சொக்கிகுளத்தைச் சேர்ந்த சத்யமூர்த்தி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
திண்டுக்கல், திருச்சி, தூத்துக்குடி, நாகர்கோவில், நெல்லை, தஞ்சை, மதுரை மாநகராட்சி ஆணையர்கள் தரப்பில் அனைத்து துப்புரவு பணியாளர்களும் முகக்கவசம் மற்றும் கையுறை அணிந்து பணி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், தமிழகத்தில் அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களும் முகக்கவசம், கையுறை அணிந்து பணி செய்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்றனர்.
அரசு தரப்பில், முன்கள பணியாளர்களாக பணியாற்றி வரும் போலீஸார் 54,434 பேருக்கு முழு முககவசம் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் நீதிபதிகள் சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீஸாரின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும். எனவே தமிழகத்தில் பணிபுரியும் அனைத்து போலீஸாருக்கும் முகத்தை மறைக்கும் ஷீல்டு, முககவசம், கையுறை ஆகியன வழங்க வேண்டும்.
இவற்றை காவல் ஆணையர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.