கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
முன்னதாக, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ரூ.165 கோடி மதிப்பீட்டில் பில்லூர் மூன்றாம் குடிநீர் அபிவிருத்தி திட்டம் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் சுரங்கப்பாதை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (ஜூன் 25) கோவையில் நடைபெற்றது.
அதன்பின், கோவை மாநகராட்சி 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் உக்கடம் பகுதியில் 39 கோடியே 74 லட்சம் மதிப்பீட்டில் பேரூர் சாலையை ஒட்டியுள்ள பெரிய குளத்தின் வடகரையில் புனரமைக்கப்பட்ட ஒரு பகுதியினை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
அதேபோல், கோவை மாநகராட்சி சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் வாலாங்குளம் மேம்பாலத்தின் கீழ் மேம்பாடு செய்யப்பட்ட ரூ.23 கோடியே 83 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட பகுதியினை பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து வைத்தார். வருவாய் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் ரூ.2 கோடியே 68 லட்சம் மதிப்பீட்டில் அன்னூர் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் குடியிருப்புக் கட்டிடத்தையும் முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
மேலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் 2 கோடியே 85 லட்சம் மதிப்பீட்டில் ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்திற்குப் புதிய கட்டிடத்தைத் திறந்து வைத்தார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் ரூ.2 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புதிய கட்டிடத்தையும் முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் 60 லட்சம் மதிப்பீட்டில் செட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார மையக் கட்டிடத்தை காணொலிக் காட்சி மூலமாக முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
இதையடுத்து, அனைத்து அரசுத் துறை அலுவலர்களுடன் கரோனா தடுப்புப் பணிகள் குறித்தும், வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்தும் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.