தேவகோட்டை அருகே சுகாதார நிலையத்தில் ரத்தம் வகை இல்லாமல் சிவகங்கைக்கு அனுப்பிவைத்த கர்ப்பிணிக்கு 108 ஆம்புலன்சில் பிரசவம் பார்த்த ஊழியர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
தேவகோட்டை அருகே வேலாயுதப்பட்டணத்தைச் சேர்ந்தவர் சின்னக்கருப்பு (31). அவரது மனைவி கலா (25). அவர்களுக்கு ஏற்கெனவே காளீஸ்வரி (3) என்ற மகள் உள்ளார்.
இந்நிலையில் கர்ப்பிணியாக இருந்த கலா பிரசவ வலியால் நேற்று இரவு 8 மணிக்கு வேலாயுதப்பட்டினம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு தேவையான ‘ஓ’ நெகட்டிவ் ரத்த வகை அங்கு இல்லாததால் 108 ஆம்புலன்சில் இரவு 12.45 மணிக்கு சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
கல்லல் அருகே சென்றபோது வயிற்று வலி அதிகமானதால் மருத்துவ உதவியாளர் பிரியா, கலாவிற்கு பிரசவம் பார்த்தார். அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.
இதையடுத்து தாயும், குழந்தையும் காளையார்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இக்கட்டாண நேரத்தில் சிறப்பாக செயல்பட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுனர் பிரதாப், மருத்துவ உதவியாளர் பிரியாவை அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.