விருதுநகரில் இன்று ஒரே நாளில் வழக்கறிஞர் உள்பட 26 பேருக்கு கரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டது.
நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையிலும் வைரஸ் தொற்று கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு உள்ளது.
இந்நிலையில், விருதுநகரில் பிரபல வழக்கறிஞர் உள்பட மாவட்டத்தில் 26 பேருக்கு இன்று ஒரே நாளில் கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது.
அவர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விருதுநகரில் தினசரி நாளிதழ் நிருபர் ஒருவருக்கும் கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுவரை இல்லாத அளவில் நேற்று ஒரே நாளில் 26 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும், விருதுநகர் மாவட்டத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 234 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 140 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார். 93 பேர் தொடர்ந்து சிகிச்சைபெற்று வருகின்றனர்.