தமிழகம்

ராணுவ வீரர் பழனியின் குடும்பத்திற்கு தமிழக ஆளுநர் ரூ.20 லட்சம் நிதியுதவி

கி.தனபாலன்

இந்திய - சீன ராணுவ மோதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் பழனியின் குடும்பத்திற்கு தமிழக ஆளுநர் ரூ. 20 லட்சம் நிதியுதவி வழங்கினார்.

லடாக்கில் ஜூன் 15-ம் தேதி இந்திய-சீன ராணுவ மோதலில் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டம் கடுக்கலூரைச் சேர்ந்த ராணுவ வீரர் ஹவில்தார் பழனி (40) வீரமரணம் அடைந்தார்.

அதனையடுத்து அவரது உடல் கடந்த 18-ம் தேதி ராணுவ மரியாதையுடன் அவரது சொந்த கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது. நாட்டிற்காக உயிர்நீத்த பழனியின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ. 20 லட்சம் நிதி வழங்கப்பட்டது.

மேலும் பழனியின் மனைவி வானதிதேவிக்கு ஆசிரியர் பணி வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தனது விருப்ப நிதியிலிருந்து பழனியின் குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் நிதி வழங்கி ஆணையிட்டார். அதனையடுத்து ஆளுநரின் சிறப்பு பாதுகாப்பு அதிகாரி மேஜர் அஜய் பி.எஸ்.ரத்தோர், கடுக்கலூரில் உள்ள பழனியின் குடும்பத்தினரிடம் ரூ. 20 லட்சத்திற்கான காசோலையை இன்று வழங்கினார்.

அப்போது பழனியின் குழந்தைகள் கல்வி கற்பதற்கான அனைத்து உதவிகளை செய்வதாக ஆளுநர் கூறியுள்ளதாக அவரது குடும்பத்தினரிடம் சிறப்பு பாதுகாப்பு அதிகாரி தெரிவித்தார்.

மேலும் பழனியின் குடும்பத்திற்கு தமிழக மக்கள் உதவ வேண்டும் என்றும், இளைஞர்களை ராணுவத்தில் சேர்த்து நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளதாக, ஆளுநர் மாநிகை செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

          
SCROLL FOR NEXT