கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா வேகமாக பரவி வருகிறது. கடந்த 5 நாட்களில் மட்டும் 50க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை 215 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மீனவ கிராமமான தூத்தூரில் 9 பேர் கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஏற்கனவே விசைப்படகு மீன்பிடி தடைகாலம் அமலில் உள்ள நிலையில் தூத்தூர், இரையுமன்துறை, மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த நாட்டு படகு, பைபர் படகு மீனவர்களும் கடலுக்கு செல்லவில்லை.
கரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் களியக்காவிளை, ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் தொடர்பில் இருந்தோர், உறவினர்களை கண்டுபிடித்து அவர்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிது. ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் தற்போது 87 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.