திருச்சி தில்லைநகர் பகுதியில் முகக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவருக்கு அபராதம் விதிக்கும் மாநகராட்சிப் பணியாளர்கள். 
தமிழகம்

திருச்சி மாநகராட்சிப் பகுதிகளில் முகக்கவசம் அணியாத நபர்களிடமிருந்து ரூ.3.60 லட்சம் அபராதம் வசூல்

அ.வேலுச்சாமி

திருச்சி மாநகராட்சிப் பகுதியில் முகக்கவசம் அணியாமல் நடமாடியவர்களிடமிருந்து கடந்த 15 நாட்களில் ரூ.3.60 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

கரோனா பரவலைத் தடுப்பதற்காக பொதுமக்கள் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும் என அரசு வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும், பலர் இதனை இன்னும் கடைப்பிடிப்பதில்லை. திருச்சி மாநகரில் இதுபோன்ற சூழலைத் தவிர்ப்பதற்காக முகக்கவசம் அணியாமல் நடமாடுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்திருந்தது.

அதன்படி, மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள், தூய்மை இந்தியா பரப்புரையாளர்கள் அடங்கிய குழுவினர் பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் நடமாடுவோருக்கு அபராதம் விதித்து வருகின்றனர். இதன்படி, கடந்த 4-ம் தேதி முதல் 19-ம் தேதி வரையிலான 15 நாட்களில் கோ.அபிஷேகபுரம் கோட்டத்தில் ரூ.1.81 லட்சம், அரியமங்கலம் கோட்டத்தில் ரூ.65.45 ஆயிரம், பொன்மலை கோட்டத்தில் 63.8 ஆயிரம், ஸ்ரீரங்கம் கோட்டத்தில் ரூ.48.8 ஆயிரம் என மொத்தம் ரூ 3.60 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி ஆணையர் சு.சிவசுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

SCROLL FOR NEXT