தமிழகம்

ஜூன் 30-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் ஓட்டல்களில் பார்சல் உணவு மட்டும் வழங்கப்படும்: தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கம் முடிவு

செய்திப்பிரிவு

கரோனா தொற்று பரவலைத் தடுக்க தமிழகம் முழுவதும் உள்ள ஓட்டல்களில் ஜூன் 30-ம்தேதி வரை பார்சல் உணவு மட்டும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கத் தலைவர் எம்.வெங்கடசுப்பு கூறியதாவது:

தமிழகம் முழுவதும் சுமார் 50 ஆயிரம் ஓட்டல்கள் உள்ளன. இவற்றில் லட்சக்கணக்கானோர் பணிபுரிகின்றனர். கடந்த ஜூன் 8-ம் தேதி முதல் ஓட்டல்களில் 50 சதவீத இருக்கைகளில் பொதுமக்கள் அமர்ந்து உணவு அருந்த அரசு அனுமதி வழங்கியுள்ளது. தற்போது தமிழகத்தில் கரோனா தொற்று அதிகமாகி வருகிறது.

ஓட்டல்களில் பொதுமக்கள் அமர்ந்து உணவு அருந்துவதை விட, பார்சல் வழங்கும் போது கரோனா பரவல் குறையும் என தொற்று நோய் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அதனால் ஓட்டல் தொழிலாளர்கள் மற்றும் வாடிக்கையாளர் நலனைகருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் இன்று (ஜூன் 20) முதல் 30-ம் தேதி வரை அனைத்து ஓட்டல்களிலும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் உணவு மட்டும் வழங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு அமலில் உள்ள சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அரசு உத்தரவின்படி இரவு 8 மணி வரை பார்சல் உணவு வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT