தமிழகத்தில் வெப்பச்சலனம், தென்மேற்குப் பருவக்காற்று காரணமாக 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட தகவல்:
“தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு தென்மேற்கப் பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனத்தின் காரணமாக கோவை, நீலகிரி ,தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். சென்னையைப் பொறுத்தவரை மாலை நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.
தமிழகத்தில் காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை ஒட்டி பதிவாகக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் விவரம்
கூடலூர் பஜார் (நீலகிரி) தேவலா (நீலகிரி) பொன்னமராவதி (புதுக்கோட்டை) ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ. மழையும் ஓமலூர் (சோலம்) சேவையாறு (கோவை) பகுதிகளில் தலா 2 செ.மீ. மழையும் பெய்தது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
ஜூன் 19-ம் தேதி முதல் ஜூன் 23-ம் தேதி வரை தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு ஆந்திரக் கடல் பகுதியில் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசப்படும்.
ஜூன் 19-ம் தேதி முதல் ஜூன் 23-ம் தேதி வரை மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே, மீனவர்கள் மேற்கண்ட பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்”.
இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.