கரோனா தொற்றால் உயிரிழந்த காவல் ஆய்வாளர் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கலை தெரிவித்துள்ளார்.
சென்னையில் கரோனா தொற்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மாம்பலம் காவல் ஆய்வாளர் பாலமுரளி கடந்த 2-ம் தேதி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 10-ம் தேதி உடல் நிலை மோசமானது.
அவரது உயிரைக்காக்க விலை உயர்ந்த ஊசி மருந்தை 2.25 லட்சம் ரூபாய் செல்வு செய்து காவல் ஆணையர் சொந்த செலவில் தருவித்து கொடுத்தார். அதன்பின்னர் உடல் நலம் தேறி வந்த நிலையில் இன்று அவரது உடல் நலம் திடீரென பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவரது இறப்பின் மூலம் சென்னை காவல்துறையில் கரோனா தொற்றில் முதல் உயிரிழப்பு நடந்துள்ளது.
அவரது மறைவுக்கு முதல்வர் இரங்கல் தெரிவித்திருந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினும் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஸ்டாலின் ட்விட்டர் பதிவு:
“சென்னை மாம்பலம் காவல் ஆய்வாளர் பாலமுரளி, #COVID19 காரணமாக உயிர் இழந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அவரது உயிர்த் தியாகத்திற்கு அஞ்சலி செலுத்துகிறேன்.
மக்களைக் காக்கும் பணியில் இருந்த ஆய்வாளரே உயிரிழக்கிறார்! இத்தகையோரின் பாதுகாப்பை எப்பொழுது இந்த அரசு உறுதிப்படுத்தும்?”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.