தமிழகம்

அகரம் அகழாய்வில் 17-ம் நூற்றாண்டு தங்க நாணயம் கண்டுபிடிப்பு: சூரியன், சிங்க உருவம் பொறிக்கப்பட்டுள்ளது

இ.ஜெகநாதன்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே அகரம் அகழாய்வில் 17-ம் நூற்றாண்டு தங்க நாணயம் கண்டுபிடிக்கப்பட்டது.

திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் பிப்.19-ம் தேதி ஆறாம் கட்ட அகழாய்வு பணி தொடங்கியது. ஊரடங்கால் அகழாய்வு பணி நிறுத்தப்பட்டு, மீண்டும் மே 20-ம் தேதி அகழாய்வு பணி தொடங்கியது.

மணலூரில் சுடுமண்ணால் ஆன உலை, கீழடியில் விலங்கின எலும்பு, கொந்தகையில் முதுமக்கள்தாழியில் மனித எலும்பு, அகரத்தில் மண் பானைகள் என மாறி, மாறி கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இன்று அகரத்தில் தங்க நாணயம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நாணயம் ஒரு செ.மீ., அளவில் உள்ளது. 300 மி.கி. எடை உள்ளது. கி.பி. 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

நாணயத்தின் முன்பக்கத்தில் நாமம் போன்றும், நடுவில் சூரியன் அதன் கீழே சிங்க உருவமும் காணப்படுகின்றன.

பின்பக்கத்தில் 12 புள்ளிகள், அதன் கீழ் இரண்டு கால்கள், கைகளுடன் கூடிய உருவம் காணப்படுகின்றது. இக்காசு வீரராயன் பணம் என்று அழைக்கப்பட்டுள்ளது என, தொல்லியல்துறையினர் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT