தமிழகம்

கரோனா தொற்று: வெளியே சுற்றிய தனிமைப்படுத்தப்பட்ட 66 பேர் மீது போலீஸ் வழக்குப்பதிவு 

செய்திப்பிரிவு

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்ட நபர்களில் வெளியே சுற்றி திரிந்த 66 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பால் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில், அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றுபவர்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், சென்னை காவல் ஆணையர் உத்தரவின்பேரில், காவல் அதிகாரிகள் தலைமையிலான காவல் குழுவினர், கரோனா பரவாமல் தடுக்க அரசு மேற்கொண்டுள்ள வழிமுறைகளை மீறுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னையில் கரேனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் வெளியே சுற்றித் திரிவதாகவும், இதனால் கரோனா தொற்று அதிகரிக்கக்கூடும் என்பதால், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில், காவல் குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, இதுவரையில் சென்னை பெருநகரில், கரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் இல்லாமல், அப்பகுதியிலிருந்து வெளியே வந்த 66 நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், கரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டும் வெளியே சுற்றித் திரிபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை சார்பாக தெரிவிக்கப்படுகிறது”.

இவ்வாறு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT