சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வைகை ஆற்றையொட்டி உபரி மண் பெயரில் மணல் கடத்தல் அதிகரித்து வருகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் மணல் மற்றும் இதர மண் குவாரிகளுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஆனால் திருப்புவனம், இளையான்குடி, மானாமதுரை பகுதிகளில் வைகை ஆறு மற்றும் கண்மாயையொட்டியுள்ள பகுதிகளில் தனியார் நிலங்களில் உபரி மண் அள்ளுவதற்கு அனுமதி பெற்று மணல் அள்ளி கடத்தி வருகின்றனர். அப்பகுதிகளில் 3 அடி கீழே மணல் கிடைக்கிறது. அவற்றை தாராளமாக அள்ளிக் கடத்துகின்றனர்.
இதை அதிகாரிகளும், போலீஸாரும் கண்டுகொள்வதில்லை. மானாமதுரை அருகே செய்களத்தூர், கல்குறிச்சி பகுதிகளில் வைகை ஆற்றையொட்டி தனியார் பட்டா நிலங்களில் 20 முதல் 30 அடி வரை ஆழத்தில் மணல் அள்ளியுள்ளனர்.
இதைக் கண்டித்து திமுக நகரச் செயலாளர் பொன்னுச்சாமி தலைமையில் மானாமதுரையில் எதிக்கட்சிகள் கூட்டம் நடந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் ஆண்டி, சிஐடியு மாவட்டச் செயலாளர் வீரையா, இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலாளர் ஆறுமுகம், விடுதலை சிறுத்தை ஒன்றியச் செயலாளர் மாணிக்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் மணல் கொள்ளையை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.