தமிழகம்

குறுவை சாகுபடி தொடக்கம்; கடன் அட்டை இல்லாத விவசாயிகளுக்கும் கடன் வழங்க வேண்டும்: விவசாயிகள் சங்கம் கோரிக்கை

செய்திப்பிரிவு

மேட்டூர் அணை திறக்கப்பட்டு குறுவை சாகுபடி தொடங்கிய நிலையில் கடன் அட்டை இருந்தால்தான் கடன் என முடிவெடுத்திருப்பது விவசாயத்தைப் பாதிக்கும். அனைத்து விவசாயிகளுக்கும் கடன் வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கப் பொதுச்செயலாளர் சண்முகம் விடுத்துள்ள அறிக்கை:

“பாசனத்திற்காக 8 ஆண்டுகளுக்குப் பிறகு மேட்டூர் அணை ஜூன் 12-ம் தேதி திறக்கப்பட்டுள்ளது. தென்மேற்குப் பருவமழையும் தொடங்கியுள்ளது. விவசாயப் பணிகளில் ஈடுபட விவசாயிகள் தயாராகிக் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், விவசாயிகளுக்கு வழங்கப்படும் விவசாயக் கடன் அனைத்தும் விவசாயக் கடன் அட்டை (KCC) வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டுமென்று மத்திய அரசின் வழிகாட்டுதல் அடிப்படையில் கூட்டுறவு துறை மாநிலப் பதிவாளர் அனைத்து மாவட்டப் பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

ஆனால், தமிழ்நாட்டிலுள்ள மொத்த விவசாயிகளில் 25 சதவீதம் விவசாயிகளுக்குத்தான் இதுவரை விவசாயக் கடன் அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதனால் பெரும்பகுதியான விவசாயிகள் கடன் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இனிமேல் கடன் அட்டை வழங்கிட அரசு முயற்சி எடுத்தாலும் இந்தப் பருவ வேளாண்மைக்குக் கடன் பெற அது உதவாது.

தேவையற்ற காலதாமதம் ஏற்படும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறோம். எனவே, கடன் கோருகிற அனைத்து விவசாயிகளுக்கும் கூட்டுறவு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் தாமதமின்றிக் கடன் கிடைத்திட தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென்று மத்திய- மாநில அரசுகளை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்துகிறது.

இல்லையென்றால் உரிய காலத்தில் தண்ணீர் திறக்கப்பட்டும் கடன் உரிய நேரத்தில் கிடைக்காத காரணத்தால் விவசாயப் பணிகள் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளதைச் சுட்டிக்காட்டுகிறோம். தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் கடன் வழங்குவதற்குரிய மனுக்களை மட்டுமே பெறும் என்றும், கடன்களை அனுமதிப்பது மற்றும் கடன் தொகையை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்துவது அனைத்தும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலமே நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

இதனால், காலப்போக்கில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூடப்படும் நிலை உருவாகும். கடன் பெறுவதில் ஏதாவது பிரச்சினையென்றால் கிராமத்திலிருந்து விவசாயிகள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும். எனவே, இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன என்பதை தமிழக மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டுமென்று முதல்வரைக் கேட்டுக் கொள்கிறோம்.

அத்துடன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் தொடர்ந்து செயல்படுவதை தமிழ்நாடு அரசு உறுதிப்படுத்த வேண்டுமென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கேட்டுக்கொள்கிறது”.

இவ்வாறு சண்முகம் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT