கிருஷ்ணகிரியில் இளைஞர் ஒருவர் துன்புறுத்தியதில் இறந்த காளைக்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டு அடக்கம் செய்தனர். 
தமிழகம்

கிருஷ்ணகிரியில் எருது விடும் விழாவில் பங்கேற்ற காளையை துன்புறுத்தி கொன்ற இளைஞர்

எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரியில் எருது விடும் விழாக்களில் பரிசுகளை வென்ற காளையை இளைஞர்கள் சிலர் துன்புறுத்தியதில் படுகாயங்களுடன் இறந்தது.

கிருஷ்ணகிரி நகரில் உள்ள பாப்பாரப்பட்டியில் வசித்து வருபவர் வெற்றிவேல் (35). இவர் வேப்பனப்பள்ளி ஒன்றியம் சென்னசந்திரம் ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இவர் சொந்தமாக காளை ஒன்றை வளர்த்து வருகிறார். இக்காளை, பல்வேறு எருது விடும் விழாக்களில் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளது.

பாப்பாரப்பட்டி சுடுகாடு அருகே உள்ள தனது நிலத்தில் கொட்டகை அமைத்து, அங்கு காளை மாட்டினை வளர்த்து வந்த வெற்றிவேல், கடந்த 5-ம் தேதி வழக்கம் போல் மாட்டை அங்கிருந்த மரத்தில் கட்டிவைத்து தீவனம் போட்டுவிட்டு பணிக்கு சென்றார். பின்னர், மாலை வந்து பார்த்தபோது மாடு கொம்புகள் உடைந்தும், வாய் பகுதியில் ரத்த காயங்களுடன் இருந்தது.

தனது காளை ஆக்ரோஷமாக, மரத்தில் தானாக மோதி காயம் அடைந்திருக்கலாம் என நினைத்த வெற்றிவேல், கால்நடை மருத்துவர்களுக்குத் தகவல் அளித்தார். கால்நடை மருத்துவர்கள் சிகிச்சையளித்து, மாட்டை சென்னை அல்லது நாமக்கல்லுக்கு எடுத்து செல்லுமாறு தெரிவித்தனர். அதற்குள் மாடு இறந்தது. இதனால் உரிய இறுதி சடங்குகள் செய்து அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு விஏஓ, வெற்றிவேலுக்கு வாட்ஸ் அப் மூலம் வீடியோ ஒன்று வந்தது. அதில், மதுபோதையில் இருந்த இளைஞர் ஒருவர், அமைதியாக இருந்த காளையை ஆக்ரோஷப்படுத்தி, காளை மோதி அடிபடும் காட்சி இருந்தது.

காளையை தொடர்ந்து சீண்டும் இளைஞரை மோத வரும்போது மரக்கிளையில் சிக்கிக் கொம்புகள் உடைந்து விடுகிறது. தொடர்ந்து காளையின் வாய், மூக்கு பகுதியில் காயம் அடைந்த ரத்தம் வெளியேறுகிறது. இதனை இளைஞருடன் வந்த மற்றவர்கள் செல்போனில் படம் பிடித்து உள்ளனர். சிறிது நேரத்தில் காளை மயக்கமடைந்த கீழே விழுவதை கண்ட இளைஞர் மற்றும் அவருடன் வந்தவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கேரள மாநிலத்தில் பழத்தில் வெடி வைத்து யானை கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காளை துன்புறுத்தப்பட்டு இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இச்சம்பவத்தில் தொடர்புடைய இளைஞர்கள் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், மாடுபிடி வீரர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT