தமிழகம்

மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் தயாரிக்கும் 8 முன்னணி நிறுவனங்களுக்கு அழைப்பு: தமிழகத்தில் முதலீடு செய்ய முதல்வர் பழனிசாமி கடிதம்

செய்திப்பிரிவு

அக்யூரே, சீமென்ஸ் உள்ளிட்ட 8 முன்னணி மருந்து, மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனங்களின் தலைவர்களுக்கு, தமிழகத்தில் முதலீடு செய்ய வரும்படி முதல்வர் பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து தமிழக தொழில்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க பல்வேறு நடவடிக்கைளை முதல்வர் பழனிசாமிமேற்கொண்டு வருகிறார். வெளிநாட்டு தூதுவர்களுடனான சந்திப்புகளுக்கு ஏற்பாடு செய்தல், முதலீடுகளை ஈர்ப்பதற்கான சிறப்பு பணிக்குழு என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி, உலகெங்கும் உள்ளமுதலீட்டாளர்களை தமிழகத்தில்தொழில் தொடங்க வருமாறுஅந்நிறுவனங்களுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.

தற்போது அக்யூரே நிறுவன தலைவர் ஜோசுவா லெவின், பிலிப்ஸ் மெடிக்கல் சிஸ்டம்ஸ் நிறுவன முதன்மை செயல் அலுவலர் பிரான்ஸ் வேன் கவுட்டன், சீமென்ஸ் ஹெல்த்கேர் நிறுவனத் தலைவர் ஜெர்டு ஹாப்னர், சிரோனா டெண்டல் சிஸ்டம்ஸ் நிறுவன முதன்மை செயல் அலுவலர் டொனால்டு கேசி, காப்பியம்ட் இன்டர்நேஷனல் நிறுவனத் தலைவர் வில்லியம் லியு, ஜிஈ ஹெல்த்கேர் நிறுவன முதன்மை செயல் அலுவலர் கிரென் மர்பி, ஹர்கோ நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் மைக்கேட் டோவார் மற்றும் பாஸ்டன் சயின்டிபிக் நிறுவனத் தலைவர் மைக்கேல் எப்.மகோனி ஆகிய 8 முன்னணி மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் தலைவர்களை தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு நேரடியாக அழைப்பு விடுத்து முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.

அக் கடிதத்தில், தமிழகத்தில் உள்ள சாதகமான அம்சங்களைக் குறிப்பிட்டுள்ளதோடு, நிறுவனங் களுக்கு தமிழக அரசு சிறப்பான ஆதரவை அளிக்கும் என்றும், தேவைக்கேற்ப சலுகைகள் வழங்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT