தமிழகம்

கை கழுவ தண்ணீர் வசதி, கிருமி நாசினி வைத்திருக்காத தனியார் அலுவலகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: மதுரை மாநகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை 

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

‘‘கை கழுவுவதற்கு தண்ணீர் மற்றும் கிருமி நாசினி வசதி ஏற்படுத்தாத தனியார் நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்லும் வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று மாநகராட்சி ஆணையாளர் ச.விசாகன் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

தமிழ்நாடு அரசின் அறிவுறுத்தலின்படி மதுரை மாநகராட்சி பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணியாக முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியினை கடைப்பிடித்தல் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

‘கரோனா’ நோய் மிக வேகமாக பரவும் தொற்று நோயாக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அரசு, தனியார் அலுவலகங்கள், மருத்துவமனைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் முதலான இடங்களில் பணிபுரிபவர்கள் மற்றும் வருகை புரிபவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப தேவையான அளவு தண்ணீர் குழாய்கள், கிருமி நாசினி மற்றும் வாஷ்பேசின்களில் திரவ சோப்பு கரைசல் அல்லது கைகழுவும் சோப்பு உள்ளிட்டவை வைக்கப்பட வேண்டும்.

கட்டிடத்திற்குள் நுழையும் முன்பும் வெளியில் செல்லும் முன்பும் கைகளை கழுவிய பிறகே அனுமதிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் மற்றும் கொள்ளை நோய் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் நிறுவனங்கள், தனியார் அலுவலகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்லும் வணிக நிறுவனங்கள் கரோனா வைரஸ் தொற்றினை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமி நாசினி மருந்துகள் வைத்திருப்பதுடன், கைகள் கழுவுவதற்கு வசதிகள் ஏற்படுத்தி மதுரை மாநகராட்சியின் கரோனா வைரஸ் தடுப்பு பணிக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT