தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட தகவல்:
“தமிழகத்தில் வெப்பச் சலனம் மற்றும் தென்மேற்குப் பருவக்காற்றின் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரியின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய பகுதிகளில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
ஆந்திர கடலோரப் பகுதி, லட்சத்தீவு, கேரளா மற்றும் கர்நாடக கடலோரப் பகுதி, மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் மத்திய தெற்கு வங்கக் கடல், வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் வரும் ஜூன் 9 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை சூறாவளிக் காற்று மணிக்கு 40 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் இந்தப் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
குளச்சல் கடல் பகுதி முதல் தனுஷ்கோடி வரை கடல் அலை 3 முதல் 3.4 மீட்டர் வரை ஒரு சில நேரங்களில் எழும்பக் கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியசஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் இரணியலில் 6 செ.மீ.மழை பதிவாகி உள்ளது.
இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.