ராமேசுவரம் மன்னார் வளைகுடா கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற பாம்பன் மீனவர்கள். 
தமிழகம்

தடைக்காலம் முடிந்து 75 நாட்களுக்கு பிறகு மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற பாம்பன் மீனவர்கள்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் ஏப். 15 முதல் ஜூன் 14 வரை இரு மாதங்கள் விசைப்படகுகளுக்கு மீன்பிடித் தடைக்காலமாகும். இந்த ஆண்டு கரோனா வைரஸ் காரணமாக சமூக இடைவெளி அவசியம் என்பதால் விசைப்படகு மீனவர்கள் மார்ச் 20 முதல் கடலுக்குச் செல்லவில்லை.

இதற்கிடையே, மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக் காலம் ஏப். 15 முதல் மே 31 வரை என 47 நாட்களாகக் குறைத்து மத்திய மீன் வள அமைச்சகம் உத்தரவிட்டது.

மே 31-ம் தேதியுடன் மீன்பிடி தடைக்காலம் முடிந்ததால் ஜூன் 1 முதல் சென்னை, கன்னியாகுமரி, தூத்துக்குடி பகுதிகளில் விசைப்படகு மீனவர்கள் வங்கக் கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். பாம்பன் விசைப்படகு மீனவர்கள் 75 நாட்களுக்குப் பின் நேற்று காலை மன்னார் வளைகுடா கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். விசைப்படகுகளில் மீன்பிடி உபகரணங்கள், டீசல் கேன்கள், ஐஸ் கட்டிகள் ஏற்றிச் சென்றனர்.

SCROLL FOR NEXT