தமிழகம்

திருச்சியில் இருந்து ரயிலில் குமரி வந்த தாய், மகளுக்கு கரோனா: ரயில் பெட்டியில் பயணம் செய்தவர்களின் விவரங்கள் சேகரிப்பு

எல்.மோகன்

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வெளியூர்களில் இருந்து வரும் நபர்களை சோதனைச் சாவடிகளில் பரிசோதனை செய்யும்போது கரோனா தொற்று இருப்பவர்கள் கண்டறியப்பட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை கரோனா வார்டில் அனுமதிக்கப்படுகின்றனர்.

மாவட்டம் முழுவதும் 19482 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 81 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிகிச்சை பெற்றவர்கள் குணமடைந்து வீடு திரும்பி வரும் நிலையில் 42 பேர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சியில் இருந்து நாகர்கோவிலுக்கு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் கடந்த 3ம் தேதி நாகர்கோவில் வந்த குமரி மாவட்டம் மெதுகும்மலை சேர்ந்த 40 வயது பெண, அவரது 12 வயது மகள் ஆகியோரின் சளி, ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு இருந்தது.

இதன் முடிவு இன்று வந்தது. அப்போது இருவருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இருவரும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மேலும் விசாரணையில் தாய், மகள் இருவரும் சென்னையில் இருந்து கார் மூலம் திருச்சி வந்து, அங்கிருந்து ரயிலில் வந்திருப்பது தெரியவந்தது.

இதனால் அவர்களுடன் காரில் வந்ததவர்கள், மற்றும் அவர்கள் பயணம் செய்த ரயில் பெட்டியில் இருந்தவர்களின் விவரங்களை சேகரித்து கரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கான நடவடிக்கையில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT