தமிழகம்

சிவகங்கையில் மணல் கொள்ளை தாராளம்: 7 லாரிகள் பறிமுதல்

இ.ஜெகநாதன்

சிவகங்கை பகுதியில் மணல் கொள்ளையில் அதிகரித்து வரும்நிலையில், மணல் கடத்தி வந்த 7 லாரிகளை வட்டாட்சியர் பறிமுதல் செய்தார்.

ஊரடங்கு தளர்வுகளை அடுத்து கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளன. இதனால் மணல் தேவை அதிகரித்துள்ளது. இந்நிலையில் தட்டுப்பாடு நிலவுவதால் மணல் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் ஒரு லோடு மணல் ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது.

மணல் விற்பனை செல்வம் கொழிக்கும் தொழிலாக மாறிவிட்டால், கடத்தல் அதிகரித்தது.

தலைச்சுமை, மாட்டு வண்டி, டிராக்டர், லாரி என, பல வழிகளில் மணலை கடத்துகின்றனர். வைகை குடிநீர் திட்டம் பாதிப்பு வைகை நதி மதுரை விரகனுார் அணையில் இருந்து பார்த்திபனுார் மதகு அணை வரை 50 கி.மீ., சிவகங்கை மாவட்டத்திற்குள் செல்கிறது.

இப்பகுதியில் 38 கூட்டு குடிநீர் திட்டம் உட்பட, 100 குடிநீர் திட்டங்கள் உள்ளன. மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட பகுதிகள் பயன்பெறுகின்றன. இப்பகுதியில் அதிகளவில் மணல் கடத்தல் நடக்கிறது.

மேலும் மாவட்டத்தில் உள்ள உப்பாறு (சிலம்பாறு), நாட்டார்கால், சருகணி ஆறு, மணிமுத்தாறு, பாலாறு, விருசுழிஆறு, பாம்பாறு, தேனாறு, நாட்டாறு ஆகிய 9 சிற்றாறுகளிலும் அதிகளவில் மணல் கடத்தல் நடக்கிறது.

அதேபோல் ஆற்றையொட்டிய பட்டா நிலங்களில் சவடு மண் பெயரில் 3 அடிக்கு கீழே கிடைக்கும் மணலை கடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்ற இரவு திருப்பாச்சேத்தி அருகே சடங்கி என்ற இடத்தில் இருந்து மணல் அள்ளி வந்த 7 லாரிகளை சிவகங்கை அருகே நல்லாகுளம் என்ற இடத்தில் வட்டாட்சியர் மைலாவதி பறிமுதல் செய்தார்.

SCROLL FOR NEXT