திமுக பொருளாளர் பதவியிலிருந்து விலகுவதாக, துரைமுருகன் கொடுத்த ராஜினாமா கடிதத்தின் அடிப்படையில் தான் எடுத்த நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் மறைவால், அப்பொறுப்பு காலியாக உள்ளது. இந்நிலையில், பொதுச் செயலாளர் பொறுப்புக்குப் போட்டியிட உள்ளதால், பொருளாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக, துரைமுருகன் தன்னிடம் கடிதம் அளித்ததாகவும், அவரின் விலகலை ஏற்றுக்கொள்வதாகவும் கடந்த மார்ச் மாதம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இதனிடையே, மார்ச் 29-ம் தேதி திமுக பொதுச் செயலாளர், பொருளாளர் பதவிக்கான தேர்வு நடைபெறுவதற்காக அக்கட்சியின் பொதுக்குழு கூடும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்குள் கரோனா அச்சுறுத்தல் காரணமாக, திமுக பொதுக்குழுக் கூட்டம் மறுதேதி அறிவிப்பின்றி ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், துரைமுருகன் கொடுத்த ராஜினாமா கடிதத்தின் அடிப்படையில் தான் எடுத்த நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 3) வெளியிட்ட அறிவிப்பு:
"கொடிய நோயான கரோனா அச்சுறுத்தும் நேரத்தில், திமுக சட்ட விதி: 17-ஐ பயன்படுத்தி, பொதுக்குழுவை கூட்டி, பொதுச் செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கு தேர்வு செய்ய முடியாத அசாதாரண சூழ்நிலை உள்ளது.
இதனை கருத்தில் கொண்டு அப்பொதுக்குழு கூடும் வரையில், திமுக சட்ட விதி: 18-ன் கீழ் எனக்கு அளிக்கப்பட்டிருக்கும் அதிகாரத்தின்படி, துரைமுருகன் கொடுத்த ராஜினாமா கடிதத்தின் பெயரில் நான் எடுத்த நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தி வைத்து அவரே பொருளாளர் பதவியில் தொடர்ந்து நீடிப்பார் என அறிவிக்கிறேன்"
இவ்வாறு மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.