தேன்கனிக்கோட்டை அருகே யானை தாக்கியதில் அதிமுகவைச் சேர்ந்த கிளை செயலாளர் உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா சந்தனப்பள்ளி ஊராட்சி சின்ன பூதகோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சென்னப்பா (55), விவசாயி. அப்பகுதியில் அதிமுக கிளை செயலாளராக இருந்தார். இவர் மேய்ச்சலுக்காக ஆடுகளை அப்பகுதியில் விட்டிருந்தார். இதில் ஒரு ஆடு காணாமல் போனது.
ஆட்டை தேடி சென்னப்பா, அப்பகுதியில் உள்ள ஏரிக்கரை பகுதியில் நேற்று (ஜூன் 2) இரவு 8 மணியளவில் சென்றார். அப்போது, அவ்வழியே சுற்றித்திரிந்த ஒற்றை யானை, சென்னப்பாவை துதிக்கையால் தூக்கி வீசி மிதித்துக் கொன்றது. இந்நிலையில், ஆட்டை தேடி சென்ற சென்னப்பா யானை தாக்கி இறந்து கிடப்பதை பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த தேன்கனிக்கோட்டை வனத்துறை, போலீஸார் நிகழ்விடத்தில் விசாரணை நடத்தினர். மேலும், யானை தாக்கி உயிரிழந்த சென்னப்பாவின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.