புதுச்சேரி அருகே மன அழுத்தத்திற்கு சிகிச்சை பெற்று வந்தவர் தனது மனைவியை கொலை செய்து விட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதுதொடர்பாக, காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:
புதுச்சேரி அடுத்த சோலை நகர் (தெற்கு) சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. கடந்த சில மாதங்களாக மன அழுத்தத்திற்கு, சுப்பிரமணி சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், இன்று (ஜூன் 1) வீட்டில் உறக்கத்திலிருந்த தனது மனைவி மேனகா தலையில், சிலிண்டரை தூக்கி போட்டுள்ளார். இதனால் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் இறந்து போனார். இதையடுத்து சுப்பிரமணி, வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது பற்றி தகவல் அறிந்தவுடன் முத்தியால்பேட்டை போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரின் உடலையும் கைப்பற்றி, அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து முத்தியால்பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.