திருச்சி மாவட்டம் நவல்பட்டு அருகேயுள்ள பூலாங்குடி காலனி பாரதி நகர் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் ஜெயகௌரி(60). இவரது வீட்டில் நேற்றிரவு திடீரென சிலிண்டர் வெடித்துச் சிதறியது.
சப்தம் கேட்டு அக்கம்பக்கத் தினர் ஓடிச் சென்று பார்த்தபோது ஜெயகௌரி, அவரது மகள்கள் விஜயலட்சுமி(32), விஜய வாணி(29), மகன் விஜயகுமார்(28) ஆகியோர் வீட்டுக்குள்ளேயே உடல் கருகி உயிரிழந்து கிடந் தனர். அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின்பேரில் நவல்பட்டு போலீஸார் அங்கு சென்று 4 பேரின் உடல்களையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியபோது, “சிலிண்டர் வெடித்துச் சிதறிய சப்தம் கேட்டதாகவும், அதன்பின் ஓடிவந்து பார்த்தபோது 4 பேரும் சடலமாகக் கிடந்ததாகவும் அப்பகுதி மக்கள் கூறினர். ஆனால், சென்னையில் ஏற்பட்ட விபத்தில் காலில் காயமடைந்த விஜயகுமார் சிகிச்சை பெறாமல் திருச்சியில் வீட்டில் இருந்துவந்த நிலையில் நேற்று மாலை உடல் நிலை கவலைக்கிடமானதால் இறந்துவிட்டார்.
இதனால் மனமுடைந்த அந்த குடும்பத்தைச் சேர்ந்த தாயும், 2 மகள்களும் விஜயகுமாரின் உடலை அறையில் கிடத்திய நிலையில், வீட்டில் இருந்த சமையல் காஸ் சிலிண்டரை வெடிக்கச் செய்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது” என்றனர்.