தமிழகம்

சம்பள குறைப்பு அறிவிப்புக்கு எதிராக மதுரையில் போக்குவரத்து தொழிலாளர்கள் திடீர் போராட்டம்

கி.மகாராஜன்

சம்பள குறைப்பு நடவடிக்கைக்கு எதிராக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் திடீர் போராட்டம் நடத்தினர்.

கரோனா தொற்று பரவலைத் தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் அரசு பேருந்துகள் இயக்கபடாததால் மே மாதம் போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு 11 மாத வருகைப்பதிவு சராசரியை வைத்து சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதனால் விடுப்புகள் இல்லாதவர்களுக்கு சம்பள இழப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதைக் கண்டித்து மதுரையில் அனைத்து அரசு போக்குவரத்து கழக டெப்போக்கள், தலைமை அலுவலகங்களில் தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். திருமங்கலம், உசிலம்பட்டி, செக்காணூரணி கிளைகளில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்தப்பிரச்சினை தொடர்பாக மதுரை கோட்ட அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் முருகேசனை, தொமுச வி.அல்போன்ஸ், சிஐடியு வி.பிச்சை, டிடிஎஸ்எப் எஸ்.சம்பத், ஏஐடியுசி நந்தாசிங், ஏஏஎல்எல்எப் முத்தையா, எச்எம்எஸ் சி செல்லத்துரை, டியுசிசி செல்வம் ஆகியோர் சந்தித்து பேசினர்.

பின்னர் எஸ்.சம்பத் கூறுகையில், ”11 மாத வருகைப்பதிவு சராசரி அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டது. இப்போது 11 நாள் சம்பள சராசரி அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும் என மேலாண்மை இயக்குனர் தெரிவித்தார்.

அப்போது யாராவது ஒருவர் 11 மாதத்தில் ஓரிரு மாதம் விடுப்பு எடுத்து சம்பளம் குறைக்கப்பட்டிருப்பதால் சம்பள நாள் சராசரி முறையால் பாதிக்கப்படுவர் எனத் தெரிவித்தோம். இது போன்ற பாதிப்பை கவனத்துக்கு கொண்டு வந்தால் சரி செய்யப்படும். இதையடுத்து காத்திருப்பு போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது” என்றார்.

SCROLL FOR NEXT